சைவக்குரவலர்கள் நால்வராலும் பாடப்பட்ட ஸ்தலங்களில் தொண்டை மண்டல ஸ்தலங்கள் குறைவு. அப்பெருமைக்குரிய தொண்டை நாட்டுத்தலம், நாட்டு மேல்மருவத்தூர் சமீபமுள்ள அச்சரப்பாக்கம். சென்னை-திண்டிவனம் சாலையில் மேல்மருவத்தூர் அடுத்துள்ளது இவ்வூர். ஜி.எஸ்.டி சாலையின் மேலேயே அமைந்துள்ள சிற்றூர்.
தந்தையின் கோவில் அதிக பழமை கொண்டதாக இருந்தாலும், மைந்தன் முருகன் பெயரில் அமைந்த கோவில் அதிக பிரபலம் (அச்சரப்பாக்கம் முருகன் கோவில் குன்றின் மேல் அமைந்தது. மகன் குன்றுதோறும் ஆடுவாரென்றால், அப்பா மன்று(அம்பலம்)தோறுமாடுபவர் (எனவே மன்றாடி).
இரு கர்ப்பக்கிரகங்களை உடைய ஆட்சீஸ்வரர் கோவில் (உமை ஆட்சீஸ்வரர் மற்றும் எமை ஆட்சீஸ்வரர்). ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருந்தாலும், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் பழமை குறிப்பிடமுடியாத அளவு புராதானமானது . அப்பனுக்கு இரு சந்நிதி இருந்தால் அம்மைக்கும் இரு சந்நிதி இருக்குமல்லவா. உமையாம்பிகை மற்றும் இளங்கிளி அம்மை என்ற பெயர்களில் அன்னை அருள் புரிகிறாள்.
பதவி உயர்வுகள் வேண்டி இத்தலத்தில் பிரார்த்திப்பவர்கள் அதிகம் என கேள்விப்படுகிறோம்.

அமைதியான கிராமம், ஐந்து மாடங்களை உடைய ராஜகோபுரம்., தெப்பக்குளம், அருமையான பழமையான பிரகாரங்கள், நன்கு பராமரிக்கப் படுகின்ற கோவில் என எல்லா விதத்தில் நம் மனதை ஈர்க்கிறது. அடியேன் இக்கோவிலில் தரிசனம் பெற சென்ற நாள் சிவனுக்குகந்த சிவராத்திரி முன்தினம் என்பதால், தேவாரப்பாடல்களை பக்தர்கள் இசைக்க கோலாகலப் பட்டது.
ஒரே வேரிலிருந்து இரு தென்னை மரங்கள் இத்தலத்தின் சிறப்பு. அசுரர்களை அழிக்க புறப்பட்ட சிவன் இங்குள்ள அச்சுமுறி விநாயகரை வாங்கியதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
அகத்திய ரிஷிக்கு அய்யன் திருமணக் கோலம் காட்டிய 17 தளங்களில் ஒன்று என்பதால் இத்தலத்தில் லிங்கத்திற்கு பின் புறம் உமையுடன் கூடிய பெருமானை திருமணக் கோலத்தில் காணலாம். கண்வ மகரிஷி மற்றும் கௌதம ரிஷிகள் இத்தலத்தில் இறைவனருள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
பல்வேறு பெருமைகளை உள்ளடக்கிய இந்த பாடல் பெற்ற ஸ்தலம் பக்தர்களின் வசதிக்கேற்ப சென்னை-மதுரை சாலையிலேயே அமைந்துள்ளது. சொந்த வாகனத்தில் செல்லும் பொது ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினால் இந்தக் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் பெறலாம்.
கோவில் பற்றிய தகவல்களுக்கு:
http://www.acharapakkamaatcheeswarartemple.tnhrce.in/index.html







No comments:
Post a Comment