Wednesday, March 24, 2021

திருவாளர் “புயல் கஜா” தமிழகம் வருகை



திருவாளர் “கஜா” தமிழகம் வருகை


(இது வானிலை அறிக்கை அல்ல)


வானத்தில் ஒரு சிறு மேகம் வந்துவிட்டால் போதும் ! உடனே செல்போனும் கருத்துமாக வந்துவிடுவார்கள். அவர்களை முந்திக்கொண்டு அவர்களது கருத்துக்கள் இங்கே!


• பதினாலாம் தேதி புயல் வரும் என்று பத்து வருடம் முன்பே கொட்டாம்பட்டி பாம்பு பஞ்சாங்கத்தில் எழுதியிருக்கிறார்கள். இதோ இந்தப்படத்தில் சிவப்பு வட்டமிடப்பட்ட இடத்தைப் பார்க்க !


• வத்தலக்குண்டு பாபா அவர்கள் இந்த வருடம் தீபாவளி காலையில் கொண்டாடப்படும் என்று சொல்லியிருந்தார்! மேலும் சென்னையில் கட்டப்பட்ட வெள்ளவடி நீர் வாய்க்கால் (storm water drain) இந்த வருடமும் அடைத்துக் கொள்ளும் என்று ஞான திருஷ்ட்டியில் சொல்லியிருந்தார். அவர் சொன்ன எல்லா பலன்களும் பலித்த நிலையில் கஜா புயலைப் பற்றி அவர் சொன்ன ஞானதிருஷ்டி வீடியோ யு டியூபில் பார்க்கவும். இதுவரை மூன்று மில்லியன் முறை பார்க்கப்பட்டு விட்ட்து.(ஏண்டா புயலுக்கு பேர் வச்சே மூணு நிமிஷம் தானேடா ஆச்சு !)


o வத்தலக்குண்டு பாபாவின் வாக்குப்படி சென்னையில் வெள்ள நீர் திருநீர்மலை மேல் கோபுரத்தைத் தொடும் !


• மாதத்துக்கு 100 ரூபாய்க்கு ஜியோ போனில் டேட்டா வாங்கமுடியாதவன் கூட, டேட்டா கடன்வாங்கி "அமெரிக்க நேவி சொல்லியிருக்கான் கஜா என்பது அதிதீவிர புயலாம்ப்பா ! நுங்கம்பாக்கம் ராமசந்திரன் டிவியில சொல்றதெல்லாம் வேஸ்ட்" என்று பீட்டர் விடுவான் !


• பள்ளி மாணவர்கள் "சோட்டா பீம்" பார்ப்பதை தியாகம் செய்துவிட்டு, வானிலை அறிவிப்பு பார்ப்பார்கள் ( பள்ளி விடுமுறையா இல்லையா என்பதுதான் அவர்களுக்கு வேண்டியது ). மழை விடுமுறையை ஈடு செய்ய பின்னாளில் எல்லா சனிக்கிழமைகளும் பள்ளிக்குப் போகவேண்டுமென்ற கவலையைப் பின்னால் பட்டுக் கொள்ளலாம் !


• இந்த நர்ஸரி ஸ்கூல் கடங்காரன், மழை காரணமாக மூணு மணிக்கே குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போகச்சொல்லாமல் இருக்கணும் என்று வேலைக்குப் போகும் தாய்மார்கள் பிரார்த்தனை செய்வார்கள் !


மாநகராட்சி புதுக் காரணங்களுக்காக சாலையைத் தோண்டுவார்கள்


• பாதியில் நிறுத்தப்படட "வெள்ளநீர் வடி வாய்க்கால்கள்" மழை நீர் சேமிப்பு திட்ட்ங்களாக பரிணாமவளர்ச்சி அடையும்.


• மியான்மர் போகவிருந்த கஜா புயலை தமிழகத்திற்கு திசை திருப்பி கஜேந்திர மோடி தமிழகத்திற்கு துரோகம் செய்து விடடார் என்று ட்வீட்டர், பேஸ்புக் , மீம் கூறும் நல்லுலகம் புலம்பும்.


• புயல் சென்னையைக் கடந்து ஒரு மாமாங்கம் ஆகி, கார்ப்பரேஷன் ஆட்கள் கூட விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி விடட நிலையில், சென்னை வானிலை நிலையத்தில் இருந்து (நாற்காலியில் பின்னால் ஒரு டர்கி டவல் புடை சூழ ) 40 டிவி மைக்குகளுடன் "கஜா புயலால் சென்னைக்கு மழை வர வாய்ப்பு இருப்பதாக" வானிலை பின்னறிவிப்பு பகருவார்கள் .


கடைசியாக . ஒரு பின்குறிப்பு ... நான் படித்த படிப்பு கற்றவித்தை எல்லாவற்றையும் கற்பனையோடு கலந்து இப்படி ஒரு பதிவு போட்டாஉடனேயே “நீ சுஜாதா மாதிரியே எழுதியிருக்கிறே ! சொந்த ஸ்டைல் ல எப்போ எழுதுவேன்னு” ஒருத்தன் கமெண்ட் போட்டு வெறுப்பேத்துவான் !


முக்கியமான உபதேசம்: புயல் மழை பற்றி விவரம் அறிய நம்பகமான அறிக்கைகளை மடடுமே படிக்கவும்/ பகிரவும். வதந்திகளை நம்பாதீர்கள். தகவல்களை பகிருமுன் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து பின் பகிரவும் !

No comments:

Important temples of Southern India

  Temples are not merely a physical structure or a monument but a wonderful focal point that have remained focal points for several millenni...