Thursday, May 20, 2021

ஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த "இடர் களையும் பதிகம்"

எப்பேர்ப்பட்ட கஷ்டங்களையும், இடர்களையும் தீர்த்து வைக்கும் ஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த இடர் களையும் பதிகம். இப்பதிகம் திருநெடுங்களம் என்னும் தலத்தில் பாடப்பெற்றது. நெடுங்களம்  திருச்சிக்கு கிழக்கே , திருவெறும்பூர் என்னும் மற்றொரு பாடல் பெற்ற  தலத்தின்  அருகில் அமைந்துள்ளது.  



பேராசிரியர் சோ. சோ. மீனாக்ஷி  சுந்தரம் அவர்கள் இந்த பதிகத்தினால் 
அவர் அனுபத்தில்  சமகாலத்தில் இருவருக்கு நோய் தீர்ந்தது பற்றி ஆச்சரியத்துடன் பகிர்ந்திருக்கிறார் . 


சொல்லற்கு அரியானை எளிதில் சொல்வதற்கு இதோ அந்த பதிகம் ..........


திருநெடுங்களம் - இடர் களையும் பதிகம்


மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே


கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


 வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

நூற்பயன் 

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே



மெய்யின்ப நிலை: நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு மெய்யின்பம்  கிட்ட ஓர் உபாயம். இதை அடியேனைப் போன்ற பலர் அனுபவித்திருக்கலாம்.


காலை சுமார் 6 முதல் 7க்குள்ளும், மாலை 5:30 முதல் 7 வரையிலும் பெரிய கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் அமர்ந்திருக்கும்போது  நம் உடலில் படும் காற்றும்  காதில் விழும் மெல்லிசையான தேவாரமும், கோசாலை பசுக்களும் சப்தமும் நம்மை வேறு ஒரு உலகிற்கு  அழைத்த்துச் செல்லும். அந்த அனுபவம் பெற மேற்சொன்ன பாடலை சம்பந்தம் குருக்கள் குரலில் கேட்டு இன்புறலாம் 


YouTube Audio




No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...