Sunday, February 5, 2023

சரியாகப் புரிந்து கொள்வோம் -2 .....யாருக்கு அபிவாதனம் செய்யலாம் ?!

யாருக்கு அபிவாதனம்  செய்யலாம் ?!  யாருக்கு அபிவாதனம்  செய்வதை தவிர்க்கலாம்  ?!

 அபிவாதனம் என்றால் ஒரு நபர் மரியாதைக்குரியவரையோ அல்லது வயதில் மூத்தவரையோ தன்  குலம்  கோத்திரம் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு வணங்குவது !  சமஸ்கிருதத்தில் சொல்வதால் இது ஏதோ  ராக்கெட் சயின்ஸ் என்று எண்ணவேண்டாம் ! (நாமெல்லாம் கொச்சையாக அபிவாதனத்தை  "அபிவாதயே"  என்று சொல்லத்  தொடங்கி இருக்கிறோம் ! திருத்திக் கொள்ளவேண்டும் )

அடியேன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த போது அவரது தாயாரை அபிவாதனம் செய்ய எத்தனித்தேன். தடுக்கப்பட்டேன்!. நண்பர் வீட்டில் பெண்களுக்கு பிரவரம்  சொல்லி நமஸ்கரிப்பது இல்லை என்ற காரணத்தால். 


செய்வதெல்லாம் அரைகுறை. இதில் ஒரு மரியாதைக்குரிய ஒரு தாயாருக்கு பிரவரம்  சொல்லி அபிவாதனம் செய்வதால் பாவம் வந்தால் வரட்டும் என்ற முடிவில் அந்த தாயாருக்கு முறையாக அபிவாதனம் செய்தேன்.  முறையாக என்ற வார்த்தையை பிரயோகித்திருக்கிறேனே எது முறையென்பது தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ளும் வகையில்  இந்த பதிவு.


அந்தக் காலத்த்தில் போக்குவரத்து வசதிகள் குறைவு. நூறு வருடத்திற்கு முன்பான காலத்தை மட்டும் சொல்லவில்லை. நூறு முதல் ஆயிரம், ஈராயிரம் காலத்திற்கு முன்பான காலத்தை குறிப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் 90 சதவீதத்தவர் தனது கிராமத்தையே தாண்டியிருக்க மாட்டார்கள். 


தனது பங்காளிகள் (கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள்), மனைவி கோத்திரத்தார் தவிர ஏனையவர்களை பார்த்தோ பேசவோ வாய்ப்பு இருக்காது. க்ஷேத்ராடனம் செல்லும் காலங்களில் மட்டுமே மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு.


அத்தகைய தருணங்களிலோ, அல்லது மேற்படிப்பிற்கு காசி, காஞ்சி, நாலந்தா  செல்லும் காலங்களிலோ, அல்லது தெரியாத பலரை   சந்திக்கும் அரிய தருணங்களில் பெரியவர்களை பார்த்தால் எப்படி அறிமுகம் செய்து கொள்பது.  அதற்கான நிலைப்படுத்தல் தான் ( standardisation  ) அபிவாதனமாக இருந்திருக்கலாம்.  நிலைப்படுத்தப்பட்ட அந்த ப்ரவர அபிவாதனத்தை நன்கு பரிச்சயமான  உறவினர்கள் மற்றும் ஊர்பெரியவர்களை சந்திக்கும் போதும், அறிமுகமில்லாதவர்களுக்கும் பொதுவாக   உபயோகப்படுத்தலாம் தானே ! 


முதலில் யார் அபிவாதனம் செய்யலாம் எனப் பார்க்கலாம். பல பழங்கால வாழ்க்கை முறைகளைப்போல், இது ஜாதி, பாஷைக்கு அப்பாற்பட்டது. எல்லா வர்ணங்களைச் சேர்ந்தவர்களும் செய்து கொண்டிருந்தது. பூணூல் அணிவதைப்போலோ, அக்நிஹோத்ரம் போலோ, இன்று ஒரு சமூகத்தாலேயே பின்பற்றப்படுகிறது. 


பிரவத்தில் சொல்லப்படும் (குறைந்தது) மூன்று ரிஷிகளில் பலர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவரை அல்லர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ! தெரியும் தானே !


இன்று அந்தணர் குலத்தால் மட்டும் வழக்கில் இருக்கும் இந்த முறை, தமிழர், கன்னடிகா , தெலுங்கர் , மலையாளி  என்று அனைவர்க்கும் பொதுவான ஒரு மொழி,  பொதுவான முறையென்பதாலேயே இது  ஒரு சாரார் சம்பந்தப்பட்டதல்ல என்பது விளங்கியிருக்கும் . 


அபிவாதனம் என்பது வணங்குவது என்பதைத் தாண்டி,  மரியாதையுடன் அறிமுகம் செய்து கொள்வதாகத்தான்  தெரிகிறது. இன்று வணங்குவதற்காக மட்டும் பயனில் உள்ளது.



யாருக்கு அபிவாதனம்  செய்யலாம் ?!? 


இந்தக் கேள்விக்கான பதில் சற்று கசப்பான உண்மையென்பதால், கடைசி வரிகளில் பார்க்கலாம்.  அவசரப்பட்டு கடைசி வரிக்கு செல்லவேண்டாம் !


எப்படி அபிவாதனம் செய்ய வேண்டும் ?

(நன்றி kamakoti .org )

முதலில் நமஸ்காரம். அப்புறம் எழுந்து, குனிந்து நின்றுகொண்டு இரண்டு காதையும் இரண்டு கையால் தொட்டுக் கொண்டு – வலது காதை வலது கையாலும், இடது காதை இடது கையாலும் தொட்டுக் கொண்டு – தான் இன்னார் என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்கு சாஸ்த்ரோக்தமாக அறிமுகம் செய்து கொள்வதான அபிவாதன வாசகத்தைச் சொல்ல வேண்டும்.. காதை ஏன் தொட்டுக் கொள்ள வேண்டுமென்றால் அதுதான் பஞ்சபூதங்களில் உசந்த ஆகாசத்துக்குரியதான சப்தத்தை க்ரஹிப்பது.

அபிவாதனம் சொன்ன பிறகு  இரண்டு கைகளையும் யும் காதிலிருந்து எடுத்து, தன்னுடைய முழங்காலிலிருந்து பாதக் கட்டைவிரல் வரை தொட்டுக் கொள்ள வேண்டும்.

குனிந்து நிற்பது பணிவைக் காட்டுவது.

இந்தக் காரணங்களைத் தவிர, இந்த நமஸ்கார க்ரியையே ஒரு யோகாப்யாஸம், பலவிதமான நாடி சலனங்களால் நம் சித்தத்தை சுத்தம் செய்யும் தேஹப்பயிற்சி என்று புரிந்து கொள்ளவேண்டும்.அதில் காதைத் தொடுவது, அப்புறம் முழங்காலிலிருந்து விரல் முடியத் தொடுகிறது எல்லாவற்றுக்குமே சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்வதான ப்ரயோஜனம் இருக்கிறது.

நமஸ்காரம் பண்ணப்படுகிறவருக்குத் தன்னை ஸர்வாங்கமும் அர்ப்பணம் செய்யும் தாத்பர்யத்தை உள்ளே அடக்கிக் கொண்டிருக்கிற யோகாப்யாஸமாக இதைச் சொல்லலாம்.

முடிவாக, நமஸ்காரம் பண்ணப்படுகிறவரின் பாதங்களைத் தொடவேண்டும்.


அபிவாதனம் செய்யும் பொது என்ன சொல்லப்படுகிறது  ?

உதாரணத்திற்கு ....

அபிவாதயே, பார்கவ, ஸ்யாவன, ஆப்நவாந, ஔர்வ, ஜாமதக்ன்ய, பஞ்சார்ஷேய, ப்ரவரான்வித (ஸ்ரீ வத்ஸ கோத்ர:) ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜுஸ்சாகாத்யாயீ, ஸோமதேவ சர்மா நாமாஹம் அஸ்மிபோ:

தமிழக சம்பிரதாயத்தில் அபிவாதயே எனத்தொடங்கும் வாசகம், தெலுங்கு சம்பிரதாயத்தில் அபிவாதயே என முடியும் . பொருள் ஒன்று தான் 

நமது கோத்ர ரிஷியினிடமிருந்து உண்டான, ப்ரபலமான, யோக்யதையுள்ள ரிஷிகளே, ப்ரவர ரிஷிகள் எனப்படுகிறார்கள். சில கோத்ரத்தில் 7 ப்ரவர ரிஷிகள், சிலதில் 5, சிலதில் 3, சிலதில் 1 – இருக்கலாம். ஆதலால் ஸப்தார்ஷேய, பஞ்சார்ஷேய, த்ரயார்ஷேய, ஏகார்ஷேய எனக் கூறுகிறோம். ‘அபிவாதயே’ எனில் இவைகளைச் சொல்லி நான் யாரெனத் தெரிவிக்கிறேன் என்று பொருள்.


யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது ?

கடவுளுக்கும்  அபிவாதனம் செய்யக்கூடாது. கடவுளுக்கு இரு கைகளையும் தலைக்கு  மேல் கூப்பியே  வணங்கவேண்டும். உன்னைப் படைத்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் கடவுளுக்குத் தெரியாதா  நீ என்ன கோத்ரம் ! எப்பேர்பட்டவனென்று !


சன்யாசிகளுக்கு அபிவாதனம் செய்யக்கூடாது... எதுவுமே வேண்டாமென்று லௌகீக உலகத்தை துறந்தவர்களுக்கு நீ எந்த கோத்திரமாயிருந்தால் என்ன கவலை  !


நதி, மரம் (விருக்ஷம் ), சமுத்திரம் , அக்நி , பலர் கூடியுள்ள சபை அங்கெல்லாம் அபிவாதனம் தேவையில்லை 


ஸ்த்ரீகளில் ஸ்தானத்தில் உயர்ந்த எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணலாமாம் ! தாயாருக்கு கட்டாயம் செய்யவேண்டும் . 

கடைசி பகுதிக்கு வருவோம் ....

யாருக்கு அபிவாதனம்  செய்யலாம் ?!? 

(தாயார் தவிர) மற்ற அபிவாதனம் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகுதி சொல்லவப்பட்டிருக்குறது. அந்த தகுதி இல்லாதவர்களுக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பது முக்கியமான விதி. 


அந்த விதி என்ன .....எதிர் ஆசாமிக்கு பிரத்யபிவாதனம்  சொல்லத்  தெரிந்திருக்க வேண்டும்  அதாவது பாத்திரம் அறிந்து பிச்சை என்பது போல இடம் தெரிந்தே வணங்கவேண்டும்.


அந்த விதத்தில் 95%  மக்கள் அபிவாதனம் ஏற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள். 


பிரத்யபிவாதனம் என்பது என்ன ! 


அறிமுகம் என்ற வகையில் எதிர் மனிதரும் தனது குலப் பெருமையை சொல்லி, ரிஷிகள், கோத்திரம், வேதம் சொல்லி  பின்பு கடைசியாக தீர்க்காயுஷ்மான் பவ ஸெளம்ய!” என்று முடிக்கவேண்டும்.


அபிவாதனமே பாவனையாக மாறி விட்ட இந்தக் காலத்தில் பிரத்யபிவாதனமும் தீர்க்காயுஷ்மான் பவ ஸெளம்ய!” என அரை வரியில் சுருங்கிவிட்டது. 


 



அதற்காக மேற்படி தகவல் பலகை எல்லாம் தேடி வணங்கவேண்டும் என்று அவசியமில்லை !


உங்களுக்கு பிரத்யபிவாதனம்  செய்யத்தெரியுமென்று உத்திரவாதம் அளித்தால் நான் உங்களுக்கு அபிவாதனம்  செய்கிறேன் என்று டீல் (deal)  பேசுவதும் கொஞ்சம் ஓவர்...  

அடியேன் சொல்வது என்னவென்றால் செய்யும் காரியத்தை புரிந்து கொண்டு செய்யுங்கள் என்பது மட்டுமே !



No comments:

Important temples of Southern India

  Temples are not merely a physical structure or a monument but a wonderful focal point that have remained focal points for several millenni...