Wednesday, April 8, 2020

கொரோனா மாமா




எல்லா சமூகத்தினரும்  இயல்பாக வாழக்கூடிய சுந்தரப்பட்டியில் எல்லோரும் நடுங்கி அவரவர் வீட்டு திண்ணையைக் காலி செய்து உள்ளே ஓடினர் .

"வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு போயி பாஞ்சு (பதினைந்து) நாளாச்சு,   வாசல்ல வந்து காத்து வாங்கலாம்னா, இந்த பாழாப்  போன பக்கத்து வீட்டுக்கு சனியனா அவுக மாமா வாராராமே ! வார அந்தாளு சீக்காளின்னு சொல்றாக !  அதுவும் ஏதோ கொரோனாவாம்ல"  - இது பரமேஸ்வரியின் புலம்பல்

"அக்கா, நான் டிவில பார்த்தேன் .... கொரோனா வந்தவுகள  அத்தனை சுளுவா வெளியில விடமாட்டாக ! வ்லாங்கு  மீன பிடிக்கிறது மாதிரி சீனால வல போட்டு மனுசனப்  பிடிக்கிறாங்கன்னு எங்க வீட்டுக் காரவுக போன்ல ஒரு வீடியோ பாத்தேன்"  - சற்று அதிகம் படித்த புஸ்பா

"அப்படியில்லடி வ்லாங்கு  மீன பிடிக்கிறது மாதிரி வல  போட்டா அம்மூர்க்காரன் கெளுத்தி மீன் மாதிரி நளுவீடுவான்ல"

அங்கு வந்த புஸ்பா புருசன்  ( பரோட்டா சூரி இல்ல )  "அப்படியெல்லாம் ஒண்ணும் கொரோனாவும்  இல்லை  கரகாட்டமும் இல்ல. பக்கத்து வீட்டுக்கு வர போறது  அவுக மாமா கருணாகரன். அவுகள  வீட்ல சுருக்கி கருணா மாமாம்பாஹ  ! வீதில வெளயாடுற  பொடியங்க  அதையே கொரோனா மாமான்னு பத்த வச்சுட்டாஹ" !

" பெருங்காயம் போட்டு  கொழம்பு  செஞ்சாலும்  கருவாட்டு நாத்தம் கரஞ்சா போகும் "  என்று சம்பந்தமே இல்லாம பழமொழி  உதிர்த்தான் புஸ்பா புருசன்

என்னடா கவுச்ச வாடை அதிகமா இருக்கேன்னு பாக்குறீங்களா ! கொரோனா வந்தாலும்  வந்தது காயும் கிடைக்காம, கறியும்  கிடைக்காம மக்கள் படும் அவதி, இப்படிப் புலம்ப வச்சுடுச்சு.

காய்கறிக்கடைக்குப் போனா சமூக இடைவெளி, கசாப்புக்கு கடைக்குப் போனா சமூக இடைவெளி, கக்கூசுக்குப் கடைக்குப் போனா சமூக இடைவெளின்னு ஒரே கெடுபிடி.

அண்ணாச்சி  கடைக்கு போன் போட்டு மளிகை சாமான் வாங்கிக்கலாம்னா...

சப்பாத்திக்கு கோதுமை மாவு இருக்கான்னா, இல்லை  கோலமாவுதான் ஸ்டாக் இருக்கு வாங்கிக்கிறீகளா என்கிறார் . 

பால் இருக்கான்னா ஸ்டாக் இல்லை பினாயில்  இருக்கு தரவா அவசரத்துக்கு ங்கிறார்.  இந்த லாக்  டவுண்  வந்தாலும் வந்தது பசும் பால், எருமைப் பால், பால் பவுடர் எல்லாத்துலயும் காப்பி  குடிச்சுட்டேன் . பினாயில் காப்பி ஒண்ணு  தான் பாக்கி ! 

அவரைச்  சொல்லி குத்தமில்லை, கடைல இருக்கிற சாமானா பாத்து  நான் கேட்டிருக்கணும்.

சிவகங்கை ஜில்லால கோவக்காயை  சிலேட்டு, ஸ்கூல் கரும்பலகை அழிக்கத்தான்  உபயோகப்படுத்துவோம் . அந்தக் காயை முந்திரிக்காய் மாதிரி கொள்ளை  விலைலல சென்னைல வியாபாரம் பண்ணுறாங்க ! கேவலமான அந்த காய் கிடைச்சாலே போதும்னு  ஆயிடுச்சு  கொரோனா வந்தப்புறம் .

டிகிரி காப்பியையே  ஆயிரம் நொட்டச்சொல்  சொன்னவங்க சுக்குக் காப்பிக்கே சொத்தை எழுதிக் கொடுக்கத் தயாராயிட்டோம்.

யாரை ஒரு நாளில்  நாலு மணி நேரம் பார்த்து விட்டு, எம்பொஞ்சாதி கொடுமைக்காரின்னு புலம்பிகிட்டு இருந்தானோ அதே முகத்தை இருபத்து நாலு மணி நேரமும்  பார்க்க வச்சுடுச்சு ! இது  போதாதுன்னு  இலவச இணைப்பா என் மாமியார் முகத்தையும் பாக்க வேண்டியிருக்கு !

வொர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லி கைல ஒரு லேப்டாப்ப கொடுத்து கம்பெனில வீட்டுக்கு துரத்தி விட்டுட்டான்.  வீட்ல வேலை செய்யலாம்னு கம்ப்யூட்டர திறந்தா... "என்னங்க சும்மா வெறும் ஸ்க்ரீன வெறிக்க வெறிக்கதானெ பாத்துகிட்டு இருக்கீங்க, வந்து கீரை ஆய்ஞ்சு  கொடுங்கன்னு தொந்தரவு! 

24 மணி நேரம் ஸ்டீம் இஞ்சின் ட்ரைவர் மாதிரி எப்பப்பார்த்தாலும் கரி அள்ளி கம்ப்யூட்டர்லயா  கொட்டமுடியும் ! என் வேலை மூளை சம்பந்தப்பட்டதுடி ! அப்பப்ப யோசிக்கணும் ...அந்த நேரம்தான் ஸ்க்ரீன் சேவர் கம்ப்யூட்டர மூடிடும்.  ...என்ற என் பதிலை என் மனைவி கேட்பதாக இல்லை.

க்ளையண்ட்  பிரச்சினைகளுக்கு ஆராய்ஞ்சு தீர்வு சொன்ன இந்த மனுஷன அரைக்கீரை ஆய வச்சுட்டாங்க ! எல்லாம் என் கிரகம் !

சாப்பிடுமுன் சோப் போட்டு கை  கழுவவேண்டும்...... சாப்பிட்டபின்,,...... காலை எழுந்ததும்...... டூத்பிரஷை  தொடுமுன் சோப் போட்டு கழுவவேண்டும், வீட்டுக்கு வெளியே போகுமுன்....... லிப்டை தொடுமுன்  .... தொட்டபின் .... ஸ்கூட்டர், கார் தொடுமுன், தொட்டபின், வீடு திரும்பிய பின்  .... கதவைத்திறந்தால், படுத்தால், கனவு  கண்டால் என  ஏகப்பட்ட கைகழுவல்கள்.  அதைவிட கொடுமை, சோப் வைக்கும் பாட்டிலை கழுவச் சொன்னதுதான் !   ஏண்டி ... நீ சொல்றது எல்லாம் சரிதான், நம்ம அபார்ட்மெண்ட் தண்ணி டேங்க் திறந்து  விடுறவனுக்கு கொரோனா  இருந்தால் என்ன பண்ணுவே என்ற பின் தான் அடங்கினாள்  என் மனைவி!



நானூறு சதுர அடி வீட்டை  எத்தனை தடவை  தான் கூட்டிப் பெருக்குறது .  எட்டுக்கால் பூச்சியெல்லாம் சபிக்கிற அளவு ஒட்டடை  அடிச்சாச்சசு. "ஏங்க  ஒட்டடை அடிச்சு 28 மணி நேரம் ஆச்சுன்னு அலாரம் வச்சு வெறுப்பேத்துறாங்க".  சிலந்திக்கு பேதியே ஆனாக்கூட 28 மணி நேரத்துல ஒட்டடை சேராது ! ஆனாலும் வீட்ல ஓவரா வேலை கொடுக்குறாங்க !


மாமனார் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டரை  மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப் போனா (அத்தியாவசிய சாமான் வாங்கத்தாங்க)  போலீஸ் லத்தி அடி  ஸ்கூட்டர்ல  தான் விழும்ங்கிறதுனால, ஸ்கூட்டர் சாவியை  அரிசிப் பானைக்குள்ள போட்டுட்டா பத்தினித் தெய்வம் (அரிசிப் பானைன்னு உளவுத்தகவல் சொன்னது என் பெரிய மகள் ) . பச்சரிசிப் பானையா  புழுங்கலரிசிப் பானையான்னு  தேடுறதுக்குள்ள விராட்   கோலி தாடிமாதிரி இருந்தது இப்போ தாகூர் தாடி மாதிரி வளர்ந்திடுச்சு !  கடைசியில பாத்தா அது ஜவ்வரிசி பாட்டிலாம் ! நம்ம உளவுத் துறை இன்னும் முன்னேறணும் !


கஷ்டப்பட்டு, போலீசு க்கு பயந்து சாக்குத் துணியை  'மாஸ்க்' மாதிரிக்கு கட்டி (எம் பொஞ்சாதி ஐடியா .....கர்சீப்பினா  கொரோனா ஈஸியா புகுந்துடுமாம்), மூஞ்சியெல்லாம் அரிப்பெடுத்து (ஆனால் கையால முகத்தை சொறியக்கூடாதாம் ....அடேய் காலால சொரிய நான் என்ன நாயாடா !)  .............. சமூக இடைவெளி விட்டு ( சாக்குத்துணி  'மாஸ்க்' காட்டினா வேர்க்குற  வேர்வைக்கும்  நாத்தத்துக்கும் இடைவெளி தானா வருது . யாரும் பக்கத்துல வரமாட்டான் )...  

 1 அடி  விட்டம்,   அரையடி ஆரம் 2πR   சுற்றளவு கொண்ட வட்டத்துக்குள் நின்று,  என் வட்டத்துக்கும் பின்னால் இருக்கும்  வட்டத்துக்கு ஒரு மீட்டர் இடைவெளி இருக்கிறதா என்று பார்க்கும் முன்பே  முன்னே ஒரு ஜந்து ஒரு சென்டிமீட்டர் இடைவெளி கூட விடாமல் என் முன்னே புகுந்து .......கொரோனாவின் கற்புக்கு லவலேசம்  பங்கம் விளைவித்த அந்த ஜந்துவை திட்டினால் என் குரல் எனக்கே  ஈனஸ்வராமாக கேட்டது ( சாக்குத் துணி திரையைத் தாண்டி ஆக்சிஜன் கூட போகமுடியாது, என் குரலா போகப்போகிறது ! . பிக் பாஸ்  கதையைப் போல  "தட்டவும் முடியாது !  தள்ளவும்   முடியாது... அந்த  ஜந்துவுக்கு என்ன  வியாதியோ ! தொட்டுத் தள்ளவா  முடியும் ?


இவ்வளவு தடையையும் மீறி (காய்கறிக்கு) என் முறை வந்த போது  மீதமிருந்த காய்கறிகள் தான் கிடைத்தது .  "என்னம்மா வெண்டைக்காய் கேட்டால் ஒரு கிலோ முருங்கக்காய் குடுக்குற ! நான் என்ன பாக்யராஜா ! என்று கடித்த என்னை பார்த்து  "அய்யே  ! எல்லாம் பிஞ்சு வெண்டிக்காப்பா ! சரியாப்  பாரு...காய்கறி வாங்குற மூஞ்சிய பாரு  " என்றாள் . 

பேடீயம்ல பணம் தரலாமா என்ற என்னை அவள் மனமார வாழ்த்தினாள் . இந்தக் கட்டுரையை குடும்பப் பசங்க படிக்க வாய்ப்பு இருப்பதனால் அவளது வாழ்த்த்து மடலை பிரசுரிக்க இயலவில்லை !


கொடுத்த பணத்தை பக்கத்தில் இருக்கும் தண்ணீர் குவளையில் போட்டாள். என்னமா பண்றேன்னு கேட்டதுக்கு.... "தோ  ப்பா ... ஒன்ன மாதிரி படிச்சவங்க, பிளேன்ல ஊர் சுத்துறவங்ககிட்டிருந்துதான்  ஏதோ  தொத்து  வியாதி வருதாம்ல ! அதான் மஞ்சத்  தண்ணீல வேப்பங்குலைய  போட்டு அதுல பணத்தைப் போடுறேன்  (பரவாயில்லை.... அரசாங்கம் தகவலை பரப்புறேன்ன்னு நல்லாப்  பரப்புறாங்கப்பா ! நம்ம விதி  , காய்கறிக் கிழவி  கிட்டயெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு .... டேய்  .... ஜிங்பின்  ...சீனாவுல எந்த மூலையில  இருந்தாலும் ஒனக்கு ஒரு நாள் நல்லா  இருக்கு )


தேர்தலெண்ணிக்கை நாளன்று சுயேச்சை வேட்பாளரின் ஏஜெண்ட்  போல நாதியத்து காய்கறிகளை கொண்டு வந்து வீட்டில் போட்டால், கிடைப்பதென்னவோ வசவு தான். "என்னாங்க  !  முத்தல்  காய்கறி இங்கு வாங்கப்படும்னு ஏதாவது போர்டு கீர்டு  கழுத்துல கட்டிக்கிட்டு போனீங்களா!  கூழாங்கல்லக் கூட  வேகவாசிச்சுடலாம், நீங்க வாங்கின காய்கறிகளை என்ன பண்றதுன்னே தெரியல" என்று  நமக்கு இடிப்பு வேற !


ஒனக்கு புருஷனா இருக்கிறதை விட தவுலுக்கு தோலாப்  போயிடலாம்னு தைரியமா சொன்னேன்.  என் பூர்வ ஜென்ம புண்ணியம், இன்னும் என் சாக்குத் துணி மாஸ்க்கை கழட்டாததால்  என் வாய்ஸ் மைண்ட் வாய்ஸாக  என்னுள் ஐக்கியமாகி அமரனானது !   தப்பித்தேன் !


சில பல சாதனைகள் செய்து காய்கறி வாங்கி வந்த என்னை, ஒரு புழுப்போல் என் மனைவி ஒரு  ஒட்டடைக்  குச்சியால் பாத்ரூமில் தள்ளி தலையில் பாத்ரூம் கழுவும் ப்ளீச்சிங்  பவுடர் தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்வித்தாள் .

அதட்டலாக நான்  " ஏண்டி ! நான் வாங்கிட்டு வந்த காய்கறி மணக்குது நான் மட்டும் தீட்டா" என்று "மனசுக்குள்"  சொன்னது  அவள் பாம்புக்கு காதுக்குக்  கேட்க அவள் சொன்ன பதில் (மூன்று முடிச்சு மனசாட்சி  போல) ஜிங்பின்  மேல் இரண்டாவது முடிச்சு போடவைத்தது.  

மனைவி சொன்னது "காய்கறியை குக்கர்ல வச்சு வேகவச்சுடுவேன்ல ". 

ஆமாமாம்...நீ காய்கறியை குக்கர்ல வேகவைக்கிற....புருஷனை ஊரவச்சு உப்புக்கு கண்டம் வைக்கிற! அலறிய எனக்கு ஆபத்பாந்தவனாக  பாத்ரூம் ஷவரும், குக்கர் விசிலும் காப்பாற்றின !

என்ன சமையல் என்று கேட்டதற்கு  "கொரோனா கூட்டு" என்றாள்  சிறியவள்.  என்னடி திகிலை கிளப்புற என்றதற்கு  அவள் சொன்னது " நான் சொன்னது கரேலா " . கரேலா என்றால் ஹிந்தியில் பாகற்காயாம் !  ஹிந்தி ஒழிக  என்று ஹிந்தி திணிப்புக்கு என் கண்டனத்தை தெரிவித்து விட்டு சாப்பிட தயாரானேன் !  (ஒரு விதத்தில் மகள்  சொன்னது சரிதான்.... பாகற்காய் நறுக்கியதும் கொரோனா  உருவத்தைப் போல் தான் இருக்கிறது. அம்புக்குறி இட்ட படத்தைப் பார்க்கவும் )



குளித்து சாப்பிட உட்க்கார்ந்தால், சாம்பாரில் காரம், புளி , தண்ணீர்  இத்யாதிகள் மாத்திரம் குறைச்சல். மற்றபடி சமையல் சூப்பர்! (உப்பு அதிகமென்பதை வேறு எப்படிச் சொல்வது !)

இந்த பொடி உப்பே  இப்படித்தாங்க ! நிதானம் தவறிடுது . கல்லு உப்பு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாக்  கேட்டாத்தானே ( உப்பு அதிகமானதற்கும் பழி நம் மீதுதான்)


எப்போடா கொரோனா லீவு முடியும், எப்போடா கேண்டீன் சாப்பாடு சாப்பிடுவோம்னு ஆயிடுது.  நாயர் கடை பாமாயில் பஜ்ஜி .....திவ்யம் !

21 நாள் லீவுன்னா அப்படி இப்படி என்று கற்பனை செய்திருந்தேன் ! பல மனக்கோட்டைகள்.....

30 நாட்களில்  கொரிய  பாஷை கத்துக்கலாமாம் ! நாம் 21 நாட்களில் ஒரிய பாஷையாவது கத்துப்போம் ! 


எந்தெந்த நாடுகள்ல லீவு இல்லையோ அந்த நாட்ல இருக்கிற நண்பர்களையெல்லாம் வாட்சப்பில் அழைத்து வெறுப்பேத்தணும் ! கடைசில வெறுப்பானதென்னமோ  நாமதான். அண்டார்டிகா தவிர எல்லா நாடுகளும் க்ளோஸ் !  அண்டார்டிகா பென்க்வினுக்குத்தான் ஃபோன்  பண்ணி  பேசணும்  !


சாவித்திரி  கனவு கண்டவனுக்கு CK  சரஸ்வதி மனைவியாய் வாய்த்தது போல ஆயிடுச்சே !  ( இந்தக் கால இளைஞர்களுக்கான  மொழிபெயர்ப்பு:  கீர்த்தி சுரேஷ் கனவு கண்டவனுக்கு சொர்ணாக்கா வாய்ச்சது மாதிரி)


சண்டை போட்டுட்டு கோபப்பட்டு  எப்போவும் போல ஸ்கூட்டர் எடுத்துக்கிட்டு வெளியில போயிடலாம்னா  "காவல் துறை உங்கள் நண்பன்னு" சொல்லிக்கிட்டு லத்திக்  கம்போட போலீஸ் நினைவுக்கு வந்தது .  "பின்விளைவுகள்" சற்று அதிகமென்பதால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது .


நமது ஒரே நண்பன் செல்போன்தான். ஒரு மாதத்துக்கு 1.5 GB ஒரு நாளைக்கு 1.5 GB  என்று  மாறிய போது ஏதோ  பறப்பது போல
ஒரு உணர்வு. அடேடே ஒரு நாளைக்கு ரெண்டு படம் பாக்கலாமேன்னு தோணிச்சு . ஆனால்  இன்றைக்கு வாட்ஸப்  மாத்திரம் தினம் 5 GB  கேட்குது.   தவிர, எல்லோரும் பூஜை அறையிலிருந்து  பாத்ரூம் வரைக்கும்  யூடியூப்  நம்பித்தான். பாட்டு கேட்க யூடியூப், பாடம் சொல்லிக்கொடுக்க யூடியூப் , தொப்பி செய்ய யூடியூப் , சமையல் செய்ய யூடியூப்  என அலைந்தால்  டெலிகாம் டவர் எரியாம  என்ன செய்யும்.


எல்லாம் முடிந்து படுக்கப் போகுமுன் பிரதமர் ஏதோ  முக்கியமா சொல்லப்போறாரேன்னு செல்போன் ஆன் பண்ணினா டேட்டா  இல்லைன்னு சோககீதம் பாடுகிறது .


இந்தப் 12 நாளும் மொபைல் நோண்டி  நோண்டி  ஆள்காட்டி விரல்  சுண்டு விரலை விட குள்ளமாக  ஆகிவிட்டது. ஆபீஸ்ல 10 மணி நேர ஷிப்ட்ல வேலை பார்த்தப்ப கூட கண்ணுக்கு கீழே  இப்போ வந்தது மாதிரி சனிக்கிரக  சைஸ்  வளையம் வந்ததில்லே.

ஆனா ஒண்ணுங்க. இந்த நேரத்தில மொபைல் மாத்திரம் ரிப்பேர் ஆச்சு.... இருக்கு அந்த ஜிங்பின்க்கு பொங்கல் ! ( ஐயோ இந்த ஃ  போன் வேறே   சீனா ஃபோன் ! )


புயல், வெள்ளம், கொரோனா  இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் வரும்போது தான் நம்முள் இருக்கும் ஜீவாத்மா அடங்கி பரமாத்மா வெளிப்படுவார். ஒரு நாளைக்கு 50 கரப்பான் பூச்சியை நசுக்கிக் கொன்னவன் கூட  ஏதாவது தியாகச்செயல் செயல் செய்யணும்னு தலைகீழா நிற்பான் !

லாட்டரி சீட்டுல லட்ச ரூபாய் பரிசு கிடைத்த கவுண்டமணி மாதிரி "நான் ஏதாவது செஞ்சாககணுமேன்னு " குதிப்பான்.


அரசாங்கம் வீட்டை விட்டு வெளியே வந்தா நறுக்கிடுவேன்னு சொன்னாலும் ஒரு 40 பேருக்கு சாம்பார் சாதம் பண்ணி விநியோகிக்கலாம்னு  முஸ்தீப்  பண்ணி புறப்பட்டால்  நம்ம கையால கொண்டு போன பொருளை எந்தப் பிச்சைக் காரனும் வாங்க மாட்டேன்குறான்.  கேட்டா ... கொரோனா பயம்ங்கறான் !  40 பொட்டலத்தை விநியோகம் பண்றதுக்குள்ள அவன் படுற பாடு.... 35 பொட்டலம் விநியோகம் பண்ணீட்டு, பாக்கி இருக்கிற 5 பொட்டலத்தை நாய்க்கு போடலாம்னா நாயும் சந்தேகமா பார்க்குது ( அதன் மைண்ட் வாய்ஸ்: எந்த நாயும் வெளில 15 நாளா வராதப்போ இந்த நாய் மாத்திரம் நமக்கு ஏதோ  கொடுக்கவர்றான் ....இதுல ஏதாவது சூது  இருக்குமோ! இவன் காக்கி கலர் ஷார்ட்ஸ் போட்டிருக்கான் ....ஒரு வேலை கார்ப்பரேஷன் நாய் பிடிக்கிறவனோ ?) . அது சரி!  நம்ம வீட்ல நம்மள  மதிச்சாத்தானே ஊர்ல மதிப்பாங்க !


சாதாரணமான சாகபட்சியான நமக்கே இந்தப் பாடுன்னா, அக்நிஹோத்திரம் பண்ற (அதாங்க புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்),  மற்றும் தினமும் தீர்த்தவாரி செய்பவர்கள்  பாடு ரொம்ப கஷ்டம்.

சிகரெட்டையாவது 4-5 பாக்கெட் வாங்கி ஸ்கூட்டர்ல ஒளிச்சு வைக்கலாம்... ஆனா குடிமகன்களுக்கு அதிக சிரமம். வாங்கவும் முடியாது ! ஒளிக்கவும்  முடியாது.

எப்போ தான் நம்ம நாடு வல்லரசு ஆகுமோ ! எப்பொழுதுதான் பாக்கெட் பால் மாதிரி என்று விஸ்கி பாக்கெட்டில் கிடைக்குமோ ! 

பஞ்சாப்ல ஒரு நல்லஉள்ளம் படைத்த குடிமகன் காரில்  4 பாட்டிலுடன் ஊரை சுற்றி வந்து, பிளாடபாரத்தில் இருக்கும் குடிமகன்களுக்கு ஜாதி மத பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் 20-30 மில்லி  விநியோகித்ததை தினமலரில்  பார்த்தோம்.வாங்குபவர்களும் பயபக்தியுடன் பெருமாள் கோவில் தீர்த்தம் போல தலை வணங்கி மண்டியிட்டு தண்டலிட்டு பெற்றுக்கொண்டார்கள் !


ஆனால் அந்த தர்ம துரை, குடிமகன்களை 3 அடி  இடைவெளி விட்டு அமரச்சொன்னது அரசு சொன்ன சமூக இடைவெளியின் உச்சக்கட்டம் !

70களில்  இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் போதிய இடைவெளி விடச்சொன்னார்கள். 

இன்று சமூக இடைவெளி... நாளை என்ன என்ன இடைவெளியோ  ! ஒரு வீட்டில் ஒருவர் மாத்திரம் தன குடி இருக்கலாம் என்ற நிலை வரலாம் ( அதுவும் நல்லதுதான்....புருஷன் பொண்டாட்டி சண்டை வராது) .

அந்த சீனாக்காரனுக்குத்தான் வெளிச்சம் !


இரண்டு ப்ளாட்டுகளுக்கு இடையில் 5 அடி  வலப்புறம்  5 அடி  இடப்புறம்  என்றாலே விதி மீறும் தமிழ் கூறும் நல்லுலகில்  சமூக இடைவெளி விடவைப்பது ஒரு கடினமான காரியம்தான்.


கொரோனாவால் சில  சௌகரியங்கள் (விடுமுறை அமலில் இருக்கும் போது மட்டும்): 


  • சாலையில் தனியாக நடக்கும் போது  தெரு  நாய்கள் தொடர பயப்படுகிறன. யாரும் இல்லாத ஊரில் இவன் யாருக்கு டீ  ஆற்றுகிறான், இவன் வில்லங்கமானவனோ என்று சந்தேகத்துடன் !
  • தீண்டாமை ஒழிக்கப்பட்டிரு க்கிறது . ஒரு குலத்தோரை தீண்ட மறுத்தால் அது தீண்டாமை . யாரையும் யாரும் தீண்டக்கூடாது என்ற நிலையில், தீண்டுவதில் / தீண்டாமல் இருப்பதில் பாகுபாடே இல்லை 
  • நேற்று வரை காவல்துறை, மருத்துவ, துப்புரவுத்துறை ஊழியர்களை சாடிக்  கொண்டிருந்த நிலை மாறி அவர்கள்   நமக்கு தெய்வமாகத் தெரிகிறார்கள் 
  • ஆபீசுக்கு ஏன் லேட் என்று யாருக்கு கேட்பதில்லை 
  • மனைவிமார்கள் எப்போதும் கேட்கும் "எங்கே இருக்கீங்க " "எப்போ வந்து தொலைப்பீங்க " என்ற கேள்விகளுக்கு வாய்ப்பு இல்லை 
  • சொந்தக் காரங்க தொல்லை இல்லை ! குறிப்பா  பொண்டாட்டி வீட்டுக்காரங்க தொல்லை இல்லை ! SV  சேகர் சொல்றது மாதிரி அவங்களுக்கே மாசாமாசம் தனியா ரெண்டு மூட்டை அரிசி வாங்க வேண்டியிருக்கிறது !
  • 50,000 மாத செலவுக்கு போதாது என்று சொன்ன குடும்பங்கள் 20,000 செலவு செய்கிறார்கள் . எது தேவையற்ற செலவு என்பது புரிந்திருக்கிறது ! புரிய வைக்கப்பட்டிருக்கிறது !
  • வரிசையில் நிற்கும் போது  ஓரிரு முறை இருமினால் க்யூ வரிசை வழி விடும்  .... வழியென்ன வழி....வைகுண்டத்தின் கதவுகளே  திறக்கும் .  

       அதே நேரத்தில் இருமல் கட்டுபடுத்த முடியாமல் இருந்தால் மருத்துவரை           அணுகவும், இல்லையென்றால் வைகுண்டம் நிஜமாகவே போகவேண்டி             வரலாம்.  கொரொனா பரிசோதனை தேவை!
  • பொருளாதார, அதிகார  ஏற்றத்தாழ்வுகளால் கொரோனா பாதிப்பில் பேதமில்லை என்ற விதத்தில் பணக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு வயிற்றில் புளி  கரைத்துக் கொண்டிருக்கிறது. பணத்தால் / அதிகாரத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்பது கனவாகிவிட்டது.  
  • குடும்பத்தாருடன்(சோதனைகள் சில பல இருந்தால் கூட) நேரம் செலவளிக்கும் வாய்ப்பு.

பல அசவுகர்யங்களும்  பயங்களும் உண்டு:

  •  பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டிருப்பதால்  காய்கறிக்கடையில் பக்கத்து வீட்டு  அம்மணி கூட அடையாளம் தெரியவில்லை...... நம் வீட்டுக்காரர்களைப் பற்றி நாமே சொல்வது மரியாதையாக இருக்காது.

  • சில (முது) நடிகர்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க, அவர்கள் அப்பா முகம்  தெரிந்தது ஒரு பெரும் சோதனை 

  • பல நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்கள் முகங்களை பார்த்து  மாரடைப்பு ஏற்படும் அவநிலை  (வெள்ளையடிக்கிறவர்கள் வேலைக்குவரமாட்டார்களல்லவா)

  • பணி  ஓய்வு பெற்ற நாட்களில்   என் தந்தையார் சொல்வார் " ரிடையர் ஆனப்புறம் என்று என்ன கிழமைன்னே  தெரியலை. எல்லா நாளும் ஞாயிறா  இருக்கு என்பார் " . அது நமக்கு ரிடையர் ஆகும் முன்பே ஆகிவிட்டது 

  • பக்கத்திலிருப்பவர் சாப்பிடும் போது புரை ஏறி இருமி / செருமி னால்  கூட பயப்பட வைக்கிறது 

  • கரண்டுக் கம்பி மூலமாகக் கூட கொரோனா  வரலாம் என்ற அப்பட்டமான புரளியைக் கூட ஆராய வைத்திருக்கிறது 

  • 5ஜி  மூலமாக கொரோனா பரப்பப் பட்டிருக்கிறது (5ஜி  தயாரிப்பில் பெரும்பான்மை சீனர்களுடையது) என்ற புரளியால் இங்கிலாந்தில் மொபைல் டவர்கள் எரிக்கப்பட்டுக்கொண்டிருன்றன. எங்கும் பயம் எதிலும் சந்தேகம். 


கொரோனாவில் இருந்து நம்மையும் சுற்றியிருப்பவர்களையும், உலக மக்களையும் காக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. பிரதமர் சொன்னபடி கைதட்டவோ, விளக்கேற்றவோ விருப்பமில்லாதவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி செய்யலாம், அதனால் உலகுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. 

மற்றபடி, அரசு சொல்கிற அத்தனை அறிவுரைகளையும் 100% ஏற்று நடப்போம். நமக்கோ அல்லது நம்  முன்னால்  எவருக்கோ கொரோனா அறிகுறி இருந்தால் அரசுக்கு தெரிவிக்கவேண்டியது நம் கடமை.

தனித்திருப்போம் அரசின் அறிவுரையினால்  !

விழித்திருப்போம் ! நமது முயற்சியினால்

வாழ்ந்திருப்போம் இறைவனருளால் !















5 comments:

Unknown said...

Increased vigour in Writing skills. I greatly admire your skills ARK. Hats off to you.correct blend of humour and facts

Srinivasan R said...

Excellent. Hilarious article with some message. Please continue the Corona service!

ARK said...

Thank you

Unknown said...

Ur sense of humour is amazing sir.... You can contribute more to the literary world....now in this new world of speed....valueless life...the need of the hour is humour... Bless us all with more humour and help take the life easy.....

Unknown said...

Ur sense of humour is amazing sir.... You can contribute more to the literary world....now in this new world of speed....valueless life...the need of the hour is humour... Bless us all with more humour and help take the life easy.....

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...