Tuesday, December 10, 2019

திருப்புட்குழி : மரகதவல்லி உடனுறை விஜயராகவப் பெருமாள் கோவில்

 சென்னைக்கு சுமார் என்பது கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிக்கு அருகில் 7 கி.மீ தூரத்தில் உள்ளது திருப்புட்குழி  என்கிற திவ்யதேச க்ஷேத்திரம்.


 ஜடாயு என்கிற பறவைக்கு  எம்பெருமான் மோக்ஷம் கொடுத்த ஸ்தலம் மரகத வல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில்.

 சீதையை ராவணன் விமானத்தில் கவர்ந்து செல்வதை கண்ட ஜடாயு சீதையை காப்பாற்ற முயன்று  தோல்வி அடைந்து தன் சிறகுகளை இழந்து மரணமடையும் தருவாயில் ராமபிரானை கண்டு விவரங்களைச் சொல்லி பின் அவரருகில் மரணித்தார். 

 ஜடாயுவின் சேவையைப் பாராட்டி ராமபிரான் ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு தன் கையாலேயே இறுதி சடங்குகளை செய்வித்தார்.

இத்தலத்தில் விஷ்ணு தன் மடியில் முக்தி பெற்ற ஜடாயுவின் உடலைக் தன தன்  மடியில் கிடத்தி தகனம் செய்த காரணத்தால் வழக்கத்திற்கு  மாறாக இத்தலத்தில் பலிபீடம் த்வஜ ஸ்தம்பம்  இரண்டும் கோவிலின் வாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.


மற்ற கோவில்களில் விஷ்ணுவுக்கு வலப்புறத்தில் கோவில் கொள்ளும் தாயார் இக்கோவிலில் இடப்புறமும்  ஆண்டாள்(பூதேவி) இறைவனுக்கு வலப்புறமும் மாறி அமர்ந்து உள்ளனர்.

சாதாரண நாட்களில் வலம் இருக்கும் மனைவி அமங்கல காரியங்கள் செய்யும் நேரத்தில்  இடம் நிற்கும் மரபு இக்கோவிலில் இருந்து துவங்கி இருக்கலாம் என்பது எளியேனின் கருத்து.

சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையின் மேலேயே அமைந்திருக்கும் இக்கோவிலை சாலையில் பயணிக்கும்போது பார்க்காமல் இருக்க முடியாது.

 கூரத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் திருப்புட்குழி. புல் என்ற பரவை குடும்பத்தை சேர்ந்த ஜடாயு ஒரு குழியில் வீழ்ந்து இருந்ததால் இத்தளத்திற்கு இப்பெயர் அமைந்தது.

பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள், கொஞ்சம் பயிற்றை மடைப்பள்ளியில் கொடுத்து, வறுத்து, நனைத்து மடியில் கட்டிக்கொண்டு தூங்குவார்கள். வறுத்த பயிர் முளைத்தால் பிள்ளைபேறு உண்டு என்று அர்த்தமாம். 

ராமானுஜாசார்யாரின் குருவான யாதவப்ரகாசர் இங்குதான் சிஷ்யர்களுக்கு வேதாந்த பூர்வபக்ஷங்களைக் கற்பித்தார்.

 ராமபிரான் தன் பாணத்தால் தோற்றுவித்த கோவில் குளத்திற்கு ஜடாயு தீர்த்தம் என்று பெயர்.

 ராமானுஜர், மணவாள முனிகள்,  திருமங்கை ஆழ்வார் போன்ற வைணவ சான்றோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோவில்.

சாதாரண வேலை நாளில் சென்ற எங்களுக்கு எக்குறையும் இல்லாமல் தரிசனம் கிடைத்தது. யார் வந்தார்கள் யார் போனார்கள் என்ற எந்தக் கவலையும் இல்லாமல் இங்கிருந்த பட்டாச்சாரியார் குழுமம் நிதானமாக இறைவனுக்கு உரிய எல்லாக் காரியங்களையும் முழுமையாக செய்வித்தார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

 1999க்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்பது கோவிலின் தற்போதைய நிலைமையில் இருந்து தெரிகிறது. ஆனால் என்ன இறைவனின் அருளாசி குறைந்தா கிடைக்கப்போகிறது!!!



திருமங்கையாழ்வார்  பாசுரம்: 

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற் கழியுமா லென்னுள்ளம் என்னும்,புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்,குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி,இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...