Tuesday, October 12, 2021

சேயாறு (செய்யாறு) பாலகுஜாம்பாள் உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில்

தந்தை சிவபெருமானைத்துதித்து  தவமேற்றும் போது  மகனாகிய  முருகப்பெருமான் தோற்றுவித்த நதிதான் சேயாறு . சேய் +ஆறு = சேயாறு. அது தற்பொழுது செய்யாறு எனப்படுகிறது. செய்யாறு நதிக்கரையில் இருக்கும் ஊர் செய்யாறு என்ற குறு நகரம் சுமார் 50,000 மக்கட்தொகை கொண்டது.


சேயாறு நதிக்கரையில் அமைந்த திருக்கோவில் வேதபுரீஸ்வரர்  கோவில். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தின் தாத்பரியம் உணர இறைவன் ஓதியதால் திரு ஓதூர் என்று  பெயர் அமைந்தது.  தமிழுக்கு இனி மெல்லச் சாவு என்று புகழப்படும் நம் காலத்தில் இப்பெயர் உருமாறி திரு(வோ)ஓத்தூர் எனப்படுகிறது.


செய்யாறு நகரத்தில், நதியின் ஓர் ஓரத்தில் அமைந்த திருவோத்தூரில் அமைந்திருக்கிறது வேதபுரீஸ்வரர் கோவில். சைவக்குரவலர்கள்  நால்வரில் முதல்வரான ஞானசம்பந்தராலும்,  பக்தியில் சந்தத்தை  தந்த அருணகிரிநாதராலும்  பாடப்பட்ட  ஸ்தலம்.



நதிக்கரையில் அமைந்த இந்தக் கோவில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய ஒரு பக்தர் பனைமரங்களை நதிக்கரையில் வரிசையாக நட்டார் . ஆனால் அவை அனைத்தும் ஆண்  பனையென்பதால், காய்கள் காய்க்கவில்லை.  அக்காலத்தில் மிகுதியாக இருந்த ஜைனர்கள் (சமணர்கள்) அந்த பக்தரிடம் ஏளனமாக  'ஏன்  உன் அப்பன் பரமசிவனிடம் சொல்லி இந்த ஆண்  பனைமரங்களில் காய் வரச்செய்யக்கூடாதா"' என்று சொன்னார்கள். 


அந்த அன்பரும் ஏனைய பக்தர்களும் செய்வதறியாது பலநாட்கள் வெட்கத்தில் கழித்தனர்   இக்கோவிலுக்கு எழுந்தருளிய ஞானசம்பந்தர் 

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே.

என்று தொடங்கும் பதிக்கதைப் பாடினார் (திருக்கடைக்காப்பு). பதினோராவது பதிகம் பாடி முடிக்க அங்கிருந்த பனைமரங்கள் அனைத்தும் குறும்புகளை ஈன்று பிள்ளைப்பெருமானின் பெருமையையும் அவர் தொழும்  இறைவனின் மகிமையையும் நிலைநாட்டின. இப்பனைமரங்களின் வாரிசுகளை இன்றும் காணலாம்.

ஆடி மாதத்தில் வேதபுரீஸ்வரர்கோயிலில் உள்ள பனைமரத்தில் இருந்து தானாக விழும் பழங்களை எடுத்து குழந்தை இல்லாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.


பெரிய கோவில், ஆனால் ஒரே ஒரு வாசல் தான். கல்யாண கோடி என்ற பெயரில் ஒரு தீர்த்தம். பனை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஐந்து பாடல் பெற்ற  தலங்களுள் இதுவும் ஒன்று. 


அழகான கோவில் ....சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. பக்தர்கள் குறைவாக வருவதனாலோ என்னமோ ! நாங்கள் சென்ற நாளில் (செவ்வாய்க்கிழமை  - 12/10/2021) நாங்கள் மாத்திரமே !



திருவண்ணாமலை மாவட்டதிற்கு  வெளியே அவ்வளவாக பிரசித்தம் இல்லாததால், இந்தக் கோவிலைப் பற்றி அடியேன் அறிந்திருக்கவில்லை....இவ்வளவு பெரிய கோவிலை எதிர்பார்க்கவில்லை. 

கோவில் கொண்டுள்ள இறைவனின் திருமூர்த்தங்களின் வயது தெரியவில்லை. இன்று நாம் காணும் கோவில் வளாகம் ஆறாம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது. 



அரசு தூங்கினாலும் பக்தர்கள் தூங்கமாட்டார்கள். பக்த கோடிகளின் கைங்கரியத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.  கோவிலில் தற்போது பாலாலயம்.  

என்று அரசு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்குமோ தெரியவில்லை! அரசின் ஒரே கைங்கரியம் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய பள்ளிக்கான 3-4 அறைகள் . இந்த சின்ன ஊரில் காலியிடத்திற்கு என்ன குறை. கோவில் நிலைத்தை ஆக்கிரமித்து, அழகைப் பாழடித்து ஒரு கட்டிடம் தேவையா??.... இத்தனைக்கும் 200 மீட்டர் தொலைவில்தான் அரசு பள்ளி.


கீழ்காணும் படத்தில் கண்ணை உறுத்தும் அந்த கட்டிடம் கோவிலின் ஒரு பகுதியல்ல. 2004ல் கட்டப்பட வகுப்புகள். 


மற்ற கோவில்களில் இல்லாத வகையில் நந்தி வாயிலை நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதம் ஓதும் போது  தகுதியில்லாவர்கள் வராமலும் தக்கவர்களை மாத்திரம் அனுப்பும் நிமித்தத்தில்  நந்தி வாயில் நோக்கி அமர்ந்திருக்கிறார்.



சிவபெருமானின் 14 தாண்டவங்களில் இங்கு வீர நடனம் (தாண்டவம்). 

ஞானசம்பந்தர் ஆண்  பனையை  பெண்ணாக மாற்றிய வரலாறை நினைவு கூரும் வகையில் கோவிலில் உள்  பிராகாரத்தில் ஒரு கல் பனை. இக்கோவிலின் இன்னொரு சிறப்பு ஒரே இடத்தில் நின்றவாறு இந்த கல்-பனை, சிவன், தேவி, முருகன் விநாயகர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்க முடியும்.



தந்தையின் புகழை அறிந்தோம். சேயாறு உருவாக்கிய சேயை மறக்க முடியுமா... இக்கோவிலில் கந்தக்கடவுளை அருணகிரியார் இவ்வாறாகப் பாடியிருக்கிறார் 


தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்

     தணியாச் சாகர மேழுங் …… கிரியேழுஞ் 

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்

     தரிகூத் தாடிய மாவுந் …… தினைகாவல் 

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்

     துணையாத் தாழ்வற வாழும் …… பெரியோனே 

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்

     தொலையாப் பாடலை யானும் …… புகல்வேனோ 

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்

     பழமாய்ப் பார்மிசை வீழும் …… படிவேதம் 

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்

     பறிகோப் பாளிகள் யாருங் …… கழுவேறச் 

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்

     டிருநீற் றாலம ராடுஞ் …… சிறியோனே 

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்

     திருவோத் தூர்தனில் மேவும் …… பெருமாளே.

திருவண்ணாமலை செல்லும் போது  ஒரு மணி அதிகம் ஒதுக்கினால் செய்யாறு இறைவனை தரிசிக்கலாம்.  


கூகுள் மேப் உதவிக்கு: https://goo.gl/maps/49byZF7MCY8fEo9GA

யூடியூப் தரிசனத்திற்கு :  https://youtu.be/1qKz-ysTdQ4


மற்றுமொரு தகவல்:  மலைக்கோவிலான ஆவணியாபுரம்  லக்ஷ்மீ நரசிம்மர் கோவில் இங்கிருந்து 20 கிமீ தொலைவில் அருகில் . சிறு குன்று . ...200 படிகள் ஏற  வேண்டும். 



ஞானசம்பந்தரின் பதிகம் (முழுமையாக) 



பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே.

இடையீர் போகா விளமுலை யாளையோர்

புடையீ ரேபுள்ளி மானுரி

உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்

சடையீ ரேயும தாளே.


உள்வேர் போல நொடிமையி னார்திறம்

கொள்வீ ரல்குலோர் கோவணம

ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்

கள்வீ ரேயும காதலே.  


தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை

ஆட்டீ ரேயடி யார்வினை

ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்

நாட்டீ ரேயரு ணல்குமே.


குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்

அழையா மேயரு ணல்குமே.


மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம்மக்க ளீரென்

றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்

நக்கீ ரேயரு ணல்குமே.


தாதார் கொன்றை தயங்கு முடியுடை

நாதா வென்று நலம்புகழ்ந்

தோதா தாருள ரோதிரு வோத்தூர்

ஆதீ ரேயரு ணல்குமே.


என்றா னிம்மலை யென்ற வரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்

என்றார் மேல்வினை யேகுமே.


நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்

சென்றார் போலுந் திசையெலாம்

ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்

நின்றீ ரேயுமை நேடியே.


கார மண்கலிங் கத்துவ ராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்

சீர வன்கழல் சேர்மினே.


குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்

அரும்பு கொன்றை யடிகளைப்

பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்

விரும்பு வார்வினை வீடே.


2 comments:

Unknown said...

Good narration about an important temple...

ARK said...

Thank you

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...