Wednesday, September 7, 2016

மேற்படிப்புக்கு முயற்சித்த காதை

மேற்படிப்புக்கு முயற்சித்த காதை 


நம்மில் பலர் ஆடிக்காற்றில் சுழற்றியடிக்கப் பட்டு இன்று ஏதோ ஒரு ஜந்துவாக, மாமிசப் பிண்டங்களாக அலைந்து கொண்டிருக்கிரோம் (சொல் உபயம் : சென்ட்ரல்  பஸ்ஸடி சர்ச் .......நினைவிருக்கலாம்......ஏ  பாவிகளே, மாமிசப் பிண்டங்களே  ! கர்த்தர் இயேசு  வருகிறார் )

நாம் படிக்க நினைத்து ஒன்று ! படித்தது ஒன்று !

வேலை பார்க்க நினைத்தது ஒன்று,! ஆனால் பார்க்கும் வேலை வேறு !

காதலியாக நினைத்ததோ உதயசந்த்ரிகா ! ஆனால் கிடைத்ததோ முனியம்மா !

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் ! ஹூம்ம் ம்  !

(நண்பர்கள்: டேய்  அ .ரா.கி  (ARK ) உனக்கு எதுக்குடா தத்துவவியல் எல்லாம் ....உனக்குத் தெரிந்ததெல்லாம் காமெடிதான்

போய்  makeup ஐ  மாத்தி  காமெடி ஸ்கிரிப்ட் எழுதிட்டு வா!

அராகி   : ஆமென் .....ததாஸ்த்து.....  )

இதுவரை அராகி முகத்தில் இருந்த 7 வாட் பிலமென்ட் பல்ப் வெளிச்சம் போய்  40 W LED  வெளிச்சம். 

சாரங்கி பின்னணி இசை *வாதன் * மாறி கதன குதூகலத்தில் வேணுகானம் . அதானேப்பா நம்மூரு திரைப்பட ஸம்ப்ரதாயம் !

1985 கடைசி செமஸ்ட்டர் .... நானெல்லாம் MSc கெமிஸ்ட்ரி   படித்து பெரிய வக்கீலாகவோ , டாக்டராவோ ,எஞ்சினீயராவோ  ஆவேன்னு தெளிவா இருந்த காலம்.

பிப்ரவரி மாத சமீபத்தில் 1614 SMS ஒரு நாள் என்னிடம்

" வாடா, நாம ரெண்டு பேரும் கேண்டீன்ல  போய்  MBA  அப்ளை பண்றது பத்தி பேசலாம்னு "கூப்பிட்டான் . 

காலை பசிமயக்கம். வடை + காஃபி  வாங்கித்தரத்தத்தான் கூப்பிடறான்னு  நம்ம்ம்பிபி , தேங்க்ஸ்  என்றபடி  அவனுக்கு முன்னால் கேன்டீன் நோக்கி .  இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் , படிப்பு பத்தின சமாசாரந்தானே என்று அவன் சொன்னது என் ஈயம் காய்ச்சி ஊற்றப்படட காதுக்கு கேட்கவில்லை.

என்ன இன்னைக்கு TREAT ....என்றவனை...... கோவிலில் செருப்பை கடித்து ஓட எத்தனிக்கும் நாயைப் பார்ப்பது போல்  ஒரு லுக் விட்டான் SMS .

முதல் பத்தியில் சொன்னதுபோல, நந்தகுமார்  ஆனா நான் நொந்தகுமார் ஆனேன் 

ஓரே டோக்கன் வாங்கி, ஒன்-பை -டூ காபி  , என்று என்னுடன் "டூ " விட்டான். அரை கப் காபி குடித்ததும் அடைத்த காது  ரிலீஸ்  ஆனது. .

(ஒரு பிளாஷ் பேக் : ஒரு நான், SMS , மற்றும் யாரோ ஒருவர் கேன்டீன் போனோம். 3 காபி டோக்கன் வாங்கிய பிறகு அந்த 3வது  நபரைக் காணோம் எதையும் தாங்கும் இதயமான எங்களுக்கு இதைத் தாங்க முடியாதா என்ன ?சர்வரிடம், த்ரீ -பை - டூ  என்றோம். சரி என்று காபி கலக்க போனவருக்கு ஒரே குழப்பம் . 1/2  சரி, .....ஒரு காப்பியை இரண்டு  கப்பில் ஊற்றலாம் .  ஆனால்  மூன்று காப்பியை எப்படி இரண்டு  கப்பில் ஊற்றுவது, கொட்டி வழியாதா  என்று வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு போனார் .


வழியாமல் எப்படி 3/2 செய்வது என்று நாங்கள் அவருக்கு சொல்லிக் கொடுத்தோம். ஹி   ஹி   ஹி   ஹி   ஹி  !!!!
பிளாஷ் பேக்  முடிவு )


சரி...சரி...SMS கேண்டீன் அழைத்துக் கொண்டுபோன பர்வத்துக்கு வருவோம்.

என்னப்பா treat எல்லாம் குடுக்கிறாய். அண்ணனுக்கு திருமணமா ? உனக்கு லைன் கிளியரா என கேள்விகளை அடுக்கினேன்.

பதிலுக்கு தலையில் பாறாங்கல்லை இறக்கினான். நாம் இருவரும் மதுரை பல்கலைக்கழகத்தில் MBAக்கு அப்ளை பண்ணலாம் என்றான்......சினிமாவுக்கு சேர்ந்து போகப்போகிறோம் என்று உரிமையோடு கூப்பிடுவத்தைப்போல!

சேர்ந்து அப்ளை செய்கிறோம் என்ற பெயரில்  SSC, BRSB, MSc(Agristatistics) கண்டபடி சேர்ந்து கெட்டுப்பொய்க்கொண்டிருந்தோம்.  கரகரப்பிரியாவிடம் DMTக்கு வசவு வாங்கியதை முன்னர் சொல்லியிருந்தேன்.

சரி, நாம முயற்சி பண்ணி எதுவும் கிடைச்சது இல்லை என்பதால் சரி  என்று சொல்லி MBA வையும் அந்தக் கணக்கில் சேர்த்தேன்.

அடுத்து வெண்ணையில் கத்தி சொருகுவது போல் "அப்ளிகேஷன் பீஸ் ₹35/- என்று சொருகு சொருகினான். என் கண்கள் சொருகின. (அந்த கோர்ஸ் படித்தவன் என்ற வகையில் சொல்கிறேன், அந்தக் கல்லூரிக்கு அது கொஞசம் ஓவர். 1623 போன்ற பணக்காரர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்ற எண்ணமோ)

அப்பா...ஆளை விடு. எங்கப்பாவிடம் கேட்கக் கூட தயக்கமாயிருக்கிறது. திடீர்னு அவ்வளவு பெரிய அமௌண்ட்க்கு அவர் எங்கே போவார் என்றேன்.

பின்னர் SMS விட்ட பல கலர் கலர் ரீல்ககளை நம்பி (உ-ம்: படிச்சு முடிச்சா அம்பானி , டாடா, L&T ஓனரெல்லாம் பொண்ணு குடுக்க ஓடோடி வருவார்கள்) தலை ஆட்டினேன்.


அன்று மாலை அப்பாவிடம் தயங்கி 
தயங்கி .....அப்பா! ஒரு விஷயம் சொல்லுவேன், உஙகளால தாங்கிக் கொள்ளமுடியுமா தெரியலை !  ஆனால் உங்க சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று  உளறிக் கொட்டினேன். 

என்னடா சொல்ல வர்றே  என்றார்  அப்பா .

நான் கூட வேண்டான்னு சொன்னேன், என் பிரென்ட்  மீனாக்ஷி தான் ... தத்துப்பித்து  என்று பேத்தினேன் .

அப்பா ஏதேதோ கற்பனை செய்து கொண்டு டென்ஷனில் வலது மார்பை பிடித்துக் கொண்டு உட்க்கார்ந்து விட்டார். பின் நான் தான் நினைவு படுத்தினேன், அப்பா இருதயம் இடது பக்கம் இருக்கிறதென !

ஒரு வழியாக உளறாமல்  தகவலை சொன்னேன்.

ஏண்டா ! ஒழுங்கா பழங்காநத்தம் சேகர் என்று சொல்லித் தொலையவேண்டியது தானே (SMS ன்  பூர்வாசிரம பெயர் சேகர்). நான் கூட என்னவோன்னு நினைத்தேன். 

( என் உளறல் + மீனாக்ஷி பெயர் சுருக்கம் எல்லாம் சேர்த்து  எங்கப்பா *மீனாட்சி அனந்தராமகிருஷ்ணன்*  என்று பெயர்ப் பொருத்தம் வரை போயிருப்பார் என்று நினைக்கிறேன்...பாவம்)

ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்ற reliefல் "சரி சரி 35 ரூபாய்க்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று ஒத்துக்கொண்டார்.

வீட்டில் இருந்த GR ஐ ஒரு வழியாக சரிக்கட்டிவிட்டோம் . காலேஜில் இருக்கும் GR ஐ  எப்படி handle செய்வதென கவலை. Prof GR இடம் ஏன்  போகவேண்டும் என்று கேட்கிறீர்களா ? அங்கேதான்  MKU  சூட்ச்சுமம் வைத்திருந்தது. ....விண்ணப்பத்தில் துறைத்தலைவர் கையெழுத்து வேண்டுமென்று !

ARK +SMS  மந்திராலோசனையில் ஒரு பொரி  தட்டியது ,  திருவிளையாடல் முருகனைப் போல் ! கெமிஸ்ட்ரி  PROF என்றால் என்ன? மேத்ஸ் PROF என்றால் என்ன? நாம்தான் எடுப்பார் கைப்பிள்ளை ஆயிற்றே ! 

மாத்ஸ் சீதாராமனிடம் போனோம்.

Prof சீதாராமன் அப்பாவி ! அப்ளிகேஷன்  கொடுத்தவுடன் பச்சை மை பேனாவை திறந்தே விட்டார். திடீரென்று நீங்க ரெண்டு பெரும் மேத்ஸ்& பிசிக்ஸ் தானே என்கிறார். சொன்னோம். GR ஐ பாருங்கள் என்று *புலிக்கூண்டுக்கு*  பரிவோடு வழிகாட்டினார் .


முன்பு சொன்னது போல் எங்கள் இருவரையும் பார்த்தால்  அவருக்கு அப்படி ஒரு வாஞ்சை . மிக்ஸியில் போட்ட தேங்காயைப் போல் அரைத்து கரைத்துவிடுவார். SMS சடடையில் முதல் பித்தானை  அவிழ்த்து விட்டுக்கொண்டு வருவதை பல முறை "வார்னி"யிருக்கிறார்.

அதென்ன எப்பப் பார்த்தலும் ஹனிமூன் தம்பதிகள் மாதிரி சேர்ந்து சேர்ந்து போயிட்டு இருக்கிறீங்க ...இது போன்ற choicest வசனங்கள் .


பேய்க்கு வாழ்க்கைப்படடால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும் . நல்ல வேளை  இந்த ~பேய்~ prof  தரைத்தளத்தில் தான் !

இஷ்ட தேவதை, கஷ்ட தேவதை என ஒரு தெய்வம் விடாமல் பிரார்த்தனை செய்துகொண்டு காரிடாரில் H2S  நாற்றத்தையும்  பொறுத்துக்கொண்டு காத்திருந்தோம்.

"நான் தான் சொல்லியிருக்கேன் ! உங்க  ரெண்டு  பேரையும் சேர்ந்தே பார்க்ககூடாதென்று " என்று சுபாஷிதானி (நன்மொழிகள்) உதிர்த்துக்கொண்டே வந்தார். 

நாங்கள் இருவரும் அவரைப் பார்க்கத்தான்  என்பதை புரிந்துகொண்டு brake  அடித்து நின்றார்.

MBA application   என்று சொன்னதும் (மனதுக்குள் இந்த சனியன்கள் ஒழிந்தால் சரி என்றிருந்தாலும்) வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல ஒரு பிடி பிடித்தார் .அன்று  எவ்வளவோ சொல்லியிருந்தாலும் நினைவில் நின்றவை இந்த  டயலாக் தான் 

"காலேஜில கிழிச்சது போதாதா , யூனிவெர்சிட்டியையும் நாறடிக்கணுமா "

"MBA  படிக்கிற ஆசையிருக்குறவன் எதுக்கு கெமிஸ்ட்ரி படிச்சு அடுத்தவனுக்கு கிடைக்கிற சீட்டையும் கெடுக்குற ! பேசாமல் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி படிச்சு தொலையலாமே "

விட்டது சனி என்று அப்ளிகேஷன் பார்மில் ஓட்டை விழும் அளவு அழுத்தி கையெழுத்திடடார்.

கையெழுத்து வாங்கிவிட்டு பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடினோம். சீல் தேவையாயிருந்தது , பின்னர் நளினகாந்த் (அதான் lab அசிஸ்டன்ட் , ஒருத்தர் அச்சம், ~மேடம்~ மடம் , நாணம், பயிர்ப்பு போன்ற  அங்கலக்ஷன்களோடு  இருப்பாரே)

சும்மா சொல்லக்கூடாது, அவர் இல்லையென்றால் நான் 6 செமஸ்ட்டர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் குண்டடித்திருப்பேன். எதையும் தாங்கும் இதயமாக எந்த ரீயேஜெண்ட்டுக்கும் மசியாமல் இருந்த அந்த மர்மப்பொடி குளுக்கோஸ் என்று தடவிப்பார்த்து குறிசொன்னவர்.


இப்படியாக அப்ளிகேஷன் போட்டு, பரீடசை எழுதி, group discussion , interview தாண்டி எனக்கு சீட் கிடைத்து, ஆனால் catalyst ஆன SMS க்கு கிடைக்கவில்லை. (நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மேற்படிப்பு படிக்ககூடாதென மனதார நினைத்த ஒருவர் எண்ணம்  பலித்தது )

எனக்கு மாத்திரம் MBA  கிடைக்கவில்லையென்றால் SMS மாதிரி CA படித்து, விசாகா ஹரி போல காலட்சேபம் செய்யவோ, Lalgudi GJR  கிருஷ்ணன் போல ஒரு வயலினிஸ்ட் ஆகவோ வந்திருப்பேன் . மேற்கூறிய இருவரும் professionally qualified .

நான் MSC முதல் செமஸ்டர் படித்துக்கொண்டிருக்கும் போது MBA அட்மிஷன் கிடைத்த்து. 30 பேர் கொண்ட வகுப்பில், மூன்றாவது லிஸ்ட்டில், 30வது ஆளாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன் .

அங்கே போனால் ஒரு ஆள், நம்மூரு பாஷையில் சொல்வது போல், *கமுக்கமாக* ஏற்கனவே சேர்ந்திருந்தார் . ....1623, ரகுபதி. அடப்பாவி...சொல்லவே இல்லையே என்று வடிவேல் போலானேன்.


SMS க்கு ஒரே மனசலிப்பு . எந்த கோர்ஸ் ம்  வாகாக கிடைக்கவில்லை . MSc ல் நாடடமில்லை. அவனை கடுமையாக எச்சரித்திருந்தேன் , கல்யாணம் கூட பண்ணிக்கோ ஆனால்  CA  மட்டும் சேராதே என்று . என் அண்ணன்  CA சேர்ந்து எடடாண்டுத் திடடம் தீட்டியதையும், என் உறவினர் +SMS எதிர் வீட்டுக்காரர் நரசிம்மன் போன்ற பல மேற்கோள் காட்டியிருந்தேன் .


Rules are there , only to be violated என்பது போல, ஒரு நாள் என்னிடம் தயங்கி, தயங்கி பேசினான் 

"நான் ஒண்ணு சொல்லுவேன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்றான்"

பட்சி எங்கேயோ சிக்கீடுச்ச்சு என்ற என் முகத்தில் கரியைப் பூசி, CA சேர்ந்த கதையைச் சொன்னான். என் கண் முன்னால் உலகம் சுற்றியது . வழுக்கைத் தலையாகிப் போன SMS முகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது .

கடைசியில் அவன் எனக்கு வழுக்கைத் தலையை கொடுத்துவிட்டு, முதல் attempt ல் இன்டெர் , முதல் attempt ல் பைனல்  என தூள் கிளப்பி , ஆல் இந்தியா rank வாங்கினான். இன்று வரை அன்றலர்ந்த 1614ஆகவே இருக்கிறான்.


_(இதனால் நீதி: நான் சொல்லும் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்_ )

பிறகு

நீதி சொல்லிவிட்டால் அத்துடன் சுபம் தானே. !































No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...