Tuesday, July 26, 2016

நேர்முகத்தேர்வில் மானபங்கப்பட்ட படலம்

சாரி(Chari ) ஐயா ! நீங்க சொன்னது சரியய்யா !

சுதாகர்  - 1           படலம் -1


வைகைல தண்ணி ஓடுதோ இல்லையோ, மதுரக்கராங்யளுக்குள்ள ஒரு  குசும்பு ஓடும். அப்படிப்பட்ட குசும்பு பிடிச்ச ஆளு தான் நம்ம சுதாகர்(1626). என்ன பேசுறான்னு யாருக்கும் தெரியாது ஆனா பேசக்கூடாததை மட்டும் பேசுவான்.  நெருங்கிப் பழகின சுப்பிரமணியபுரம் சண்டியர்களுக்கு மாத்திரம் தெரியும்.

அவனைப் பத்தி ஒரு சிறுகதை இருக்கிறது. பல வருடம் கழித்து நண்பர்கள் சேர்ந்து இருக்கிறோமே, அவனை கேட்காமல்  எழுதினா சபை மரியாதையாக இருக்காதே என்று பார்த்தேன்.  அவனை ஆடு ஆக்குகிறோமே, ஆடு தலையை ஆட்டும் 'பொறவு' வெட்டலாம் என்று காத்திருந்தால், ஆடு ஜோக் "forward " செய்கிறது ஆனால் தலையை ஆடடமாட்டேன் என்கிறது.

தலையை ஆடடாவிட்டாலென்ன  நாமே மஞ்சள்தண்ணீர் ஊற்றி தலையை ஆடடவைத்து வெட்டுவதில்லையா  என்று சமாதானம் செய்துகொண்டு இந்த கதையை  வெட்டுகிறேன் ......எழுதுகிறேன் (violence  அதிகமாகிக்கொண்டு போகிறதோ ?) போவோம் !

புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு flash  back .


1981 மூன்றாவது செமெஸ்டர்……..
நமக்கு கிடைத்திருந்த Prof .சாரி ஒரு அற்புதமான ஆசிரியர். 

சுஜாதா, ஓம்  பூரி பற்றி  சொல்வது போல “உணர்ச்சியை காட்டாத ஒரு இந்திய மனிதர்”. அவர் சிரித்து நான் பார்த்ததில்லை ...கோபப்பட்டும் பார்த்ததில்லை.

தன்னம்பிக்கையின் உச்ச கட்டம் அவர்.

 "நான் சொல்லிகுடுக்கற கணக்குத்தான் யூனிவர்சிட்டி பரிக்‌ஷைல வரும், தேவையில்லாமல் எல்லாத்தயும் படிச்சு நேரத்த வீணடிக்காதே " என்பார்.

 நம் கல்லூரியில் ஆறு வருடம் முன் படித்த என் அண்ணன் கூட இதே வசனத்தை அவரிடம் இருந்து கேட்டதாகச் சொல்லுவார்.

அவர் ஒரு நாள் புள்ளியியல் வகுப்பு அசைன்மென்ட் விடைத்தாட்களோடு வந்தார்.

 (உடனே நான் போன கதையில் சொன்ன inorganic  கெமிஸ்ட்ரி S நடராஜனைப் பற்றி நினைக்கவேண்டாம். புள்ளி வைக்கத் தெரிந்தவரெல்லாம் புள்ளியியல் வாத்தியார் இல்லை. வேலைக்கார முனியம்மா கூட புள்ளி வைத்து கோலம் போடுகிறாள்  நடராஜன்  புள்ளியியல் இல்லை (அலங்)கோலவியல் )


சிரிப்போ கோபமோ இல்லாமல் ஓம் பூரி (அதாவது Prof  )……….. "ஏம்பா அசைன்மெண்ட்ன்னாலே காப்பி  அடிக்கிறதுதான் , தெரியும் ...ஆன இங்க ஒருத்தன்  roll  நம்பர்ஐயும் சேத்து் காப்பி அடிச்சுருக்கான் , நான் யாருக்குன்னு மார்க் போடுவேன்" என்று அங்கலாய்த்துக் கொண்டார்.  

நம்முள் யாரோ ஒருவர் அசடு வழிந்தார். அவரது அதிர்ஷ்டம் யாரென்று என் நினைவுக்கு வரவில்லை (சே ! ஒரு ஆடு தப்பித்து விட்டதே !)

இப்போ fast  forward .....1983, ஆறாவது செமெஸ்டர் முடிந்தது. நாமெல்லாம் வேலை (வெட்டி) இல்லா படடதாரிகள்.

சுப்ரமணியபுரத்தில் எங்கள் வீட்டில் இருந்தபடி நான் கப்பலூரில் இருந்த ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு  வேலைக்கு மனுக்கொட்டிக்கொண்டிருந்தேன் (அதாம்பா மெனக்கெடுவது போல )..........  ....எனக்குத் தெரிந்த சைதாப்பேட்டை வண்ணாந்துறை இங்கிலீஷில் ....

இப்போ தான் ஹீரோ என்ட்ரி ....சுதாகர் வருகை.  

Ph .D  முடித்த்துவிட்டு தான் ஓய்வேன் என்றபடி நான் பில்டப் கொடுத்திருந்த காலம். அவன் தலையை பார்த்ததும் வேலைக்கான விண்ணப்பத்தை மறைத்தேன் .

ஹாஸ்டெல் மாணவர்கள் ரூமுக்குப் போனால் நம்மவர்கள் கண் முன்னாள் இருக்கும் "மாரிசன் & பாய்ட் " புத்தகத்தை விட்டுவிட்டு பரண் மேல் ஒளிந்திருக்கும் சரோஜா தேவி புத்தகத்தை சரியாக கண்டெடுத்து போல், என் வேலை மனுவை கண்டுபிடித்து விட்டான் (அவனுக்கு மோப்ப சக்தி அதிகம், ரொம்ப நன்றியுள்ளவன் )

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்குமே  (கரெக்ட் உங்களுக்கும் மோப்ப சக்தி அதிகம் தான்)

டேய், எனக்கும் அந்த வேலைக்கு அப்ளை பண்ணனும் நீயே எழுதிக் கொடுத்து விடு என்றான் .

தன்னுடைய ஆங்கிலப் புலமை அதிகமில்லை என்றான் . என் ஆங்கிலம் ஷேக்ஸ்பியருக்கு நிகரானது என்று என்னை தூக்கவும், பாழாய் போன அந்த புகழ்ச்சியிலே நான் கொஞ்சம் கீழே இறங்கிவந்தேன் .

 “போனால் போகிறது, என் அப்பிளிகேஷனைப் பார்த்தது எழுதிக் கொள்” என்று சொல்லி சற்று கருணா ரசம் ஊற்றினேன்.

சுதாகர் நில் ! நில்!.. எழுதுவதற்கு முன் அந்த ஓம் புரியை நினைவுபடுத்திக்கொள் (அதாம்பா Prof  சாரி) . அந்த வகுப்புல யாரோ செய்தது போல் உன் மனுவில்  என் பெயரை எழுதிவிடாதே என்றேன். …………..

ஹாஸ்ய ரசம் ஊற்றிய எனக்கு குனிந்து தான் "பாத"ரசத்தை காண்பித்தான் !

 கொஞ்சம் இடம் குடுத்தா மடத்தப் பிடிப்பீங்களே, நான் என்ன அவ்வளவு மாங்காமடையனா, என்று கடுப்படித்தான்.


ஊர் மேய வந்த இடத்திலே, என் வீட்டு பேப்பர் வாங்கி ( நானே எங்கக்கா உபயத்துல கலக்டர் ஆபிஸ்ல சுட்டது ), என் பேனாவை வாங்கி, என் மனுவைக் காப்பி அடிச்சு, தான் விண்ணப்பம் போட்ட சாதனையை, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்ல unreserved பெட்டில, துண்டு போட்டு இடம் பிடிச்சவன் சாதனை மாதிரி தலை ஆகாயத்தை பார்க்க, பெருமையுடன்கிளம்பிப் போனான்.

போறதுக்கு முன்னாடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டில போடுறதை பத்தியும் பேசியிருந்தோம்.

அந்த கம்பெனிக்கு போதாத வேளை எங்கள் இருவரையும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள். .

 நாங்களும் நேரான முகத்தோடு போனோம்.    விளக்குத்தூண் பக்கத்தில் ஒரு கல்லு சந்து . மொத்த அலுவலகமே 300 சதுரஅடிதான். எங்களை போல் ஒரு 10 பேர் வந்திருந்தார்கள். நாங்களெல்லோரும் வெயிட்டிங் ரூமில் காத்திருந்தோம் (கல்லு சந்துதான்  )

சுதாகர் சொன்னான் “உன்னை கூப்பிட்டது ஆச்சரியம் இல்லடா . என்னை கூப்பிட்டது தான் ஆச்சரியம்”  என்று என் ஈகோவில் அக்மார்க் நெய் ஊற்றினான்.

எங்களிருவரையும் கூப்பிட்டது ஆச்சரியம் இல்லை "ஆப்பு சரித்திரம் " என்பது விரைவில் விளங்கியது

நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்னை முதலில் கூப்பிட்டனுப்பினார்கள். போனேன். கேள்வி கேட்டார்கள் பதில் சொன்னேன்.  இன்டெர்வியூ முடிந்தபிறகு தான் புரிந்தது, நான் சொன்ன எல்லா சரியான பதில்களுக்கும் அவர்கள் தவறான கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று .

(திருவள்ளுவர் என்று நான் பதில் சொன்ன கேள்வியை தவறாக கம்ப ராமாயணம் எழுதியது யார் என்று கேட்டிருந்தார்கள். திருக்குறள் எழுதியவர் யார் என்று சரியாகக் கேட்டிருக்க வேண்டாமோ?)

  கூடவே கொசுறாக “ சுதாகர் யார்?” என்றார்கள்.  எனக்குள் ஏதோ நெருடியது .

 அடுத்து சுதாகரை அழைத்தார்கள்

சுதாகரிடம் பல கேள்விகள் கேட்டார்கள். அவற்றுள்  இரண்டு கேள்விகளுடன் இந்தக் கதையை முடிக்கிறேன். கேள்விக்கு பதில் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  பதில் தெரியவில்லையென்றால் நீங்களும் பெயில் !

1)  வேலைக்கு மனுப் போட்டால் "On IGS " (இந்திய அரச பணிக்கு மாத்திரம் ) என்ற தபால்தலையை உபயோகப் படுத்தக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா ? (அவர்களுக்கு சுமார் 3 ரூபாய் தண்டம் )

2)   உங்களுக்கும் உங்களுக்கு முன்னாள் வந்த அ.ரா. கி.க்கும் எப்படி ஒரே "DateofBirth " நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகளா?

அறிவினா, அறியா வினா , ஐய வினா, கொளல்  வினா , கொடை வினா ஏவல்  வினா என்ற ஆறு வகைவினாக்களில் அடங்காமல் இது  (வேலை) கொடா வினா என்று மாத்திரம் புரிந்தது


ஐயா Prof. வேங்கடாச்சாரி!  தாங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா !

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...